முதல் படம் வெளிவரும் முன்பே மரணம் அடைந்த இளம் மலையாள இயக்குனர்

மலையாள சினிமாவில் 2004ம் ஆண்டு சாபு ஜேம்ஸ் இயக்கிய 'ஐ ஆம் க்யூரியஸ்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மனு ஜேம்ஸ். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தாலும் வளர்ந்து வாலிபமான பிறகு சினிமா இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு 'நான்சி ராணி' என்ற படத்தை இயக்கினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த படம் பல பிரச்சினைகளை தாண்டி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தில் அஹானா கிருஷ்ணா, சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் பணிகளை முடித்த நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனு ஜேம்ஸ் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 31.

மனு ஜேம்ஸ் மறைவு குறித்து 'நான்சி ராணி' படத்தின் தயாரிப்பாளர் ஜான் டபிள்யூ வர்கீஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: மனமும் உடலும் நடுங்குகிறது… என்ன எழுதுவது?. தற்செயலாக மனுவை ஒருநாள் சந்திந்தேன், அந்த அறிமுகமே எங்களுக்குள் ஆன்ம பந்தமாக மாறியது. அது என்னை நான்சி ராணி படத்தின் ஒரு அங்கமாக மாற்றியது. அந்த மனு இப்போது இல்லை. இது எங்களுக்கு பெரிய இழப்பு. மனு தன் கனவுகளை விட்டு விலகி செல்லும் போது, நீங்கள் உருவாக்கிய உங்கள் கனவை, உங்கள் முதல் படமான 'நான்சி ராணி' மக்கள் இதயங்களை உடைக்கும். மலையாள மண்ணில் அந்த ஒற்றை படம் அழியா புகழ் அடையும். அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாத மனித வாழ்வின் முன் அனைவரும் சிறியவர்களே.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.