மேகாலயா, நாகலாந்து தேர்தல் வாக்குப் பதிவு: ஆட்சியைப் பிடிப்பது யார்?

மேகாலயாவில் இன்று 59 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கும் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

மேகாலயா நிலவரம்!

மேகாலயாவில் 60 தொகுதிகள் உள்ள நிலையில், சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

21.4 லட்சம் வாக்காளர்கள் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். அந்த மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், முதல்வருமான கன்ராட் சங்மா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரது கூட்டணி அரசில் இடம்பிடித்திருந்த பாஜக, இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளும் களம் காண்கின்றன.

நாகலாந்து தேர்தல்!

நாகாலாந்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் இன்று (பிப்ரவரி 27) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13.17 லட்சம் ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக ஏராளமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலத்தில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.