நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே கோட்டைபாளையத்தார் தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி புகழேஸ்வரன். இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், புகழேஸ்வரன் நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் விட்டுவிட்டு வழக்கம் போல் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர், புகழேஸ்வரன் மறுநாள் ஆடுகளை பட்டியிலிருந்து திறந்து விடுவதற்காக சென்றுள்ளார்.
அங்கு பட்டியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து கிடந்தது. மேலும் இருபதுக்கும் மேற்ப்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன. பட்டியில் ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த புகழேஸ்வரன் சம்பவம் குறித்து சுகாதாரத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த நாய்கள் ஆடுகளை கடித்துக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, உயிரிழந்த ஆடுகள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டன.
இதே போன்று, நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அருகே பட்டியில் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில் ஐந்து ஆடுகள் இறந்து போனது.
அவற்றில் ஒரு ஆட்டை முழுமையாக மர்ம விலங்கு தின்றுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, வருவாய்த்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது, “ஏற்கனவே இந்தப் பகுதியில் மர்ம விலங்கு பட்டிகளில் புகுந்து ஏராளமான ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. ஆகவே, வனத்துறை அதிகாரிகள் ஆடுகளை கடிப்பது எந்த விலங்கு என்று கண்டுபிடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்” என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.