லியோ படப்பிடிப்பில் ‘தம்பி விஜய்யுடன்.. லோகேஷ் பெரும் வீரனைப் போல்’ – மிஷ்கின் நெகிழ்ச்சி!

‘லியோ’ படத்தில் தனது பகுதி நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், காஷ்மீர் படப்பிடிப்பில் நடந்த சுவராஸ்ய விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானலை அடுத்து தற்போது காஷ்மீரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டு சென்னை திரும்புவதாக தெரிவித்துள்ள மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

image

அதில், “இன்று காஷ்மீரிலிருந்து சென்னை திரும்புகிறேன்… மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட ‘Leo’ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். ‘Leo’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்று மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.