'லியோ' படப்பிடிப்பை முடித்த மிஷ்கினின் நெகிழ்ச்சி கடிதம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'லியோ'. இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், மாத்யு தாமஸ், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத் துவக்கத்திலிருந்து காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். அடுத்த மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிகிறது.

இதனிடையே, 'லியோ' படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாக மிஷ்கின் அறிவித்துள்ளார். இது குறித்து, “இன்று(பிப்., 27) காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். அசிஸ்டன்ட் டைரக்டர்களின் ஓயாத உழைப்பும் என் மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப் போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினானன், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும்,” என தனது கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.