விஏஓ ஒத்துழைப்பு இல்லாததால் குமரியில் தேங்கி கிடக்கும் இலவச வேட்டி, சேலை

நாகர்கோவில்: குமரியில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை விஏஓக்களும், சில கடைகளில் ரேஷன்கடை ஊழியர்களும் வழங்கினர். ஆனால் சில கடைகளுக்கு விஏஓக்கள் செல்லாததால், வேட்டி, சேலைகள் ரேஷன்கடைகளிலேயே கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் கிடைக்காமல் உள்ளது. இந்தநிலையில் வருவாய்த்துறை நிர்வாகம் ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட வேட்டி, சேலைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதா? என்ற விபரத்தை கேட்டுள்ளது. இந்த விவரத்தை பல கடைகளில் கொடுக்காமல் உள்ளனர்.

இதற்கிடையே அரசு உத்தரவின்பேரில் வேட்டி, சேலைகளை வழங்க விஏஓக்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறி பொது விநியோக ஊழியர் சங்கம் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இது குறித்து பொது விநியோக ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் குமரி செல்வன் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் ரேஷன்கார்டுகள் எத்தனை உள்ளதோ அத்தனை வேட்டி, சேலைகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக 1,000 கார்டுகள் இருந்தால், சுமார் 600 கார்டுகளுக்கான வேட்டி, சேலைகள் மட்டுவே வழங்கி இருந்தனர். சில ரேஷன்கடை விற்பனையாளர்கள், ரேஷன்கடைக்கு வந்த வேட்டி, சேலைகளை பிரித்து வழங்கி விட்டனர்.

ஆனால் பல கடைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள் வராமல் வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. எனவே அரசின் நன்மதிப்பை கெடுக்காமல், கிராம நிர்வாக அதிகாரிகள் ரேஷன் கடைகளில் உள்ள வேட்டி, சேலைகளை ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்’ என்றார். தமிழக அரசு உத்தரவின் பேரில் சில கடைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள் செல்லாததால்  இலவச வேட்டி, சேலைகள் கடைகளிலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் மாவட்ட கலெக்டர் தலையிட்டு, பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.