கூடுவாஞ்சேரி அருகே, நெடுஞ்சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்ததை அடுத்து, அவற்றின் மீது வெள்ளை பெயின்ட் அடித்த பெண் மருத்துவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை அருகேயுள்ள பெருங்களத்தூர், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரின் நுழைவாயிலாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் இருந்து, நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் வழியாக கொளப்பாக்கம் வரை செல்லும் சாலையில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வந்த நிலையில், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வேகத்தடைகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டன.
ஆனால், விபத்துகளைக் குறைக்க அமைக்கப்பட்ட வேகத்தடைகளே விபத்துகளுக்கு காரணமாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, வேகத்தடை மீது இருந்த வெள்ளை, மஞ்சள் நிறக்கோடுகள் அழிந்ததால், வேகத்தடை இருப்பதே தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நெடுங்குன்றத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரான மஞ்சுபிரியா, விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடைகள் மீது வெள்ளை மற்றும் மஞ்சள்நிற பெயின்ட்டால் கோடுகளை வரைந்தார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனி நபராக வேகத்தடைகள் மீது வர்ணம் பூசிய செயலை, பலரும் பாராட்டி வருகின்றனர்.