மதுரை: முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 வருடங்களாக பல்வேறு தரப்பினரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடுத்திருந்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கும், பெயரை சேர்க்கப்பட்டதற்கும் தடை கோரி முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, அவர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.