இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்த வாத்தி பட இயக்குனர்

சமீபத்தில் நடிகர் தனுஷ், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் முதன்முறையாக நேரடியாக நடித்த வாத்தி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது. 90களில் இறுதியில் இருந்த கல்வி முறையை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்புடன் டீசன்டான வெற்றியையும் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் படத்தில் சொல்லப்பட்திருக்கும் கல்வி முறை தமிழக கல்வி முறைக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதாக சில விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது, ஒருவேளை நான் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றால் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு முறையை மாற்றி பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். தெலுங்கு தேசத்தை விட தமிழகத்தில் இவரது பேச்சு கிட்டத்தட்ட விவாதம் செய்யும் அளவிற்கு சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சாதி ரீதியான ஒதுக்கீட்டிற்கு ஆதரவு அளிக்கும் பலரும் இவரது கருத்துக்களை விமர்சனம் செய்தனர்.

மேலும் இட ஒதுக்கீடு என்பது கல்வி அமைச்சரின் துறையில் வராது, அது சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தான் வருகிறது என்று கூறி இயக்குனரின் கருத்துக்களை கிண்டலடித்தும் வந்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தான் எந்த விதமான உள்நோக்கத்துடனும் அப்படி கூறவில்லை என்றும் மாணவர்கள் பெரும்பாலானோர் படிப்பதற்கு அவர்களுடைய பொருளாதார ரீதியான பிரச்னைகள் தடையாக இருக்கின்றன என்பதால் அவர்கள் படிக்க வசதியாக இருக்கும் பொருட்டு பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு தேவை என்றுதான் கூறியதாகவும் தமிழில் அது வேறுமாதிரி புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளார் வெங்கி அட்லூரி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.