பாலியல் குற்றச்சாட்டில் தேடப்பட்ட பிரபல சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரை எவ்வளவு தேடியும் இந்திய போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கைலாசா என தனி நாடை உருவாக்கி அவரது ஆதரவாளர்களுடன் வசித்து வருகிறார். அந்தத் தீவு எங்குள்ளது என்பது புரியாத புதிர் தான். அவர் தன் நாட்டுக்கென தனி நாணயங்களையும் வெளியிட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தா உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி வெளியான போது, அவரே கடிதம் வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அவ்வப்போது தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிடுவார். இந்நிலையில், அவர் ஜெனிவாவில் நடந்த ஐநா சபை கருத்தரங்கில் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கைலாசா என்ற நாடே இல்லை என இந்தியா மறுத்து வரும் நிலையில், ஐநா கருத்தரங்கில் United States of kailasa என்ற பலகையுடன் பெண் ஒருவர் அமர்ந்திருந்தது பலரையும் ஷாக் ஆக்கியது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ ட்வீட்டில், “ஐநாவில் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் நிலையான வளைச்சி பற்றிய கருத்தரங்கில் கைலாசா பங்கேற்றுள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஜனவரி மாதமே நித்யானந்தாவின் கைலாசா நாட்டை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நெவார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களுடனான இருதரப்பு ஒப்பந்தத்தையும் போட்டுள்ளதாக கைலாசாவின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதெல்லாம் தாண்டி இந்தியாவால் நித்யானந்தா துன்புறுத்தப்பட்டதாக ஐநா கருத்தரங்கில் கைலாசா சார்பில் தெரிவிக்கப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா தாய் நாட்டால் துன்புறுத்தப்பட்டதாக ஐநாவில் பேசப்பட்டுள்ளது. நித்யானந்தா அப்படி என்ன துன்புறுத்தலுக்கு ஆளானார் என்பது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.