அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (28) இந்தியாவின் இந்தூரில் ஆரம்பமாகவுள்ளது.
அதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் தீவிர பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்ற பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் மற்றும் டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் இந்திய அணி வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக இந்த 2 போட்டிகளும் 3 நாட்களிலேயே முடிந்து விட்டன. டெஸ்ட் போட்டிகள் 5 நாட்களுக்கு நடத்தப்படும் நிலையில் உலகின் முதல் இடத்திலுள்ள அணியான ஆஸ்திரேலியாவால் இந்தியாவிடம் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நாளை 3 ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெறவுள்ளது. முன்னதாக இந்த போட்டியை இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், மைதானத்தின் நிலைமையை கருதி போட்டி இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலை 3 ஆவது டெஸ்டிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன. அவருக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.