வெள்ளை இறால் மரபணு மேம்பாட்டு திட்டம், மீன் நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு திட்டம், மீன் வளர்ப்பு காப்பீடு திட்டம் ஆகிய மூன்று திட்டங்களை சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தில், மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிலையத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் மத்திய கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஜதிந்திரநாத் சுவைன், மத்திய மீன்வளத்துறை இணைச்செயலாளர் பாலாஜி, மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ”கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத்துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. மீன்வளத்துறையில் இந்தியா சுயசார்பு அடைந்துள்ளது. பிரதமர் சொன்னது போல மீன்வளத்துறையிலும் விவசாயத்துறையிலும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. மீன்களுக்கான உள்நாட்டு தேவைகள் இருக்கிறது. அதனை நிறைவேற்ற வேண்டும். மீன்வளத்துறைக்கு தனியாக அமைச்சகம் வைக்க வேண்டும் என்பது நெடுநாள் கோரிக்கையாக இருந்தது. அதனை பிரதமர் நிறைவேற்றியுள்ளார்.
கடந்த யூனியன் பட்ஜெட்டில் துறைமுகங்களை கட்டமைப்பை வலுப்படுத்தியது. அதே போல் இந்த ஆண்டு பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீன்கள் மற்றும் மீனவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவிறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
மகராஸ்டிராவில் உள்ள 5 மீனவளத்துறைமுகங்கள் அரசால் மீட்கப்பட்டது, அவற்றை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மீன்பிடி துறைமுகங்களிலேயே மீனவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இதுவரை சுமார் 4323 மீன்பிடி பாதுகாப்பு கருவிகள் கொடுத்துள்ளது. 5000 மீனவர்கள் பயன்பெறும் வகையில் படகுகளுக்கு ஜிபிஎஸ் டிராக்ககிங்க் கொடுக்கப்பட்டுள்ளது, கடல் சார் உணவை ஏற்றுமதி செய்வதில் இந்தியா 4- வது இடத்தில் இருக்கிறது” என்றார்.
அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், ”பிராதான் மந்திரி சம்பதா யோஜ்னா ஒரு நல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்டது. இதன் மூலம் 70 லட்ச டன் மீன்களை உற்பத்தி செய்யவும், 2024-2025 ஆண்டுகளில் ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில், நீர்வாழ் விலங்கு நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு திட்டம் தொடங்கப்பட்டது என்றார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மூன்றாண்டுகளுக்கு 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புத் திட்டம் விவசாயிகளுக்கு நோயைக் கண்டறிந்து புகாரளிக்க உதவுவதோடு, அதற்கான தீர்வுகளையும் அளிக்கும். மீன் நோய்களை சரியான நேரத்தில் தெரிவிக்க தனி ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இறால் மீன் வளர்ப்பின் உற்பத்தி 1990 -ல் சுமார் ஒரு லட்சம் டன்னிலிருந்து 2022 -ல் ஒன்பது லட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது. ஒரு இனத்தை அதிகமாகச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் பூர்வீக இறால்களை வளர்க்கவும் விஞ்ஞானிகள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்ட இந்திய இறால் வகைகளை உருவாக்குவார்கள்” என்றார்.
மேலும், இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையும் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.