தென்காசி மாவட்டத்தில் இளம்பெண் கிருத்திகா கடத்தப்பட்ட வழக்கில், குற்றாலம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினித் என்பவரும், அதே பகுதியில் வசித்து வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சில நாட்களில் உறவினர்களுடன் வந்த கிருத்திகாவின் பெற்றோர், வினித்தை தாக்கிவிட்டு, கிருத்திகாவை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக, வினித் தரப்பில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, இளம்பெண் கிருத்திகா, தாம் கேரளாவில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார். அவர் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டதோடு, வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
வழக்கின் ஆரம்ப கட்டத்தில் காவல்துறையினர் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குற்றால காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அலெக்ஸை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in