மெட்ராஸ் கெனல் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 வகைகளை சேர்ந்த 286 நாய்கள் கலந்து கொண்டன.
நாய்களின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வரிசையாக அழைத்து வந்து பார்வைக்கு வைத்தனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட வித்தியாசமான நாய்கள் ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் கீழ்படிதல், துப்பறிவு திறன், குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களிடம் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது நாளாக நடந்த கண்காட்சியில், பல்வேறு உயர்ரக நாய்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மகராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து வந்திருந்த கிரேட் டேன் ரக நாய், ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட டாபர்மேன் நாய் முதலிடம் பிடித்தன. இந்த இரண்டு நாய்களுக்கு இரு பிரிவுகளில் சாம்பியன் பட்டங்கள் வழங்கப்பட்டன. ஒடிசாவில் இருந்து வந்திருந்த ஆஸ்திரேலியா ஷெப்பர்ட் வகை நாய், சென்னையில் இருந்து வந்திருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ராக நாயும் பரிசுகளை வென்றன.
வார விடுமுறை நாள்கள் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. அதில் அதிகமான பயணிகள் நாய்கள் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர். போட்டி நடுவர்களாக செர்பியன் நாட்டைச் சேர்ந்த இஸ்ட்வான், பீட்டர்தெரிக், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜான், டெரிக் உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்தக் கண்காட்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய்பிரபாகரன் தான் வளர்க்கும் டேசன்ட், ஹஸ்கி, டாபர்மேன், கிரேட்டேன், ராஜபாளையம் நாய் என மொத்தம் 7 நாள்களை காட்சிப்படுத்தினார்.