கொலை வழக்கில் பிடிக்கப் போனபோது தாக்குதல் ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: மதுரையில் இன்று காலை பரபரப்பு

மதுரை: கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை பிடிக்க போனபோது அவர், போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால், ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காயமடைந்த ரவுடியை, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இன்று காலை நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வளர்நகரைச் சேர்ந்தவர் வினோத் (29). மதுரை உலகநேரி செங்குன்றம் கன்னிமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (எ) டோரா பாலா (29). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவர் மீதும் மாநகர் காவல்நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், டோரா பாலா கடந்த 23ம் தேதி உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘சில நாட்களுக்கு முன்பு நண்பர் வினோத்துடன் மது அருந்திய போது அவரது தாயார் குறித்து டோரா பாலா அவதூறாக பேசியுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் சமாதானமாக போக வேண்டும் என டோரா பாலாவை வினோத், அவரது நண்பர்கள் ஜெகதீஸ்வரன், மேலூர் மாரி, புலி என்ற விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகியோர் சேர்ந்து வளர்நகர் பகுதியில் மது அருந்த அழைத்துச் சென்றனர். பீர் பாட்டிலால் குத்திக்கொலை அங்கு மது அருந்தியபோது, போதை தலைக்கேறிய நிலையில், டோரா பாலா மீண்டும் வினோத்திடம் தகராறு செய்து அவரது தாயை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த வினோத், ஜெகதீஸ்வரன் உள்பட 5 பேர் கும்பல் பீர்பாட்டிலால் டோரா பாலாவை சரமாரி குத்தி படுகொலை செய்து, அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்று விட்டனர். இந்த கொலை குறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகதீஸ்வரனை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த வினோத் (29) உள்ளிட்ட 4 பேரை தேடி வந்தனர். அதிகாலை துப்பாக்கிச்சூடு இந்நிலையில், தப்பிய 4 பேரில் வினோத், மதுரை மஸ்தான்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக, அண்ணா நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அண்ணாநகர் போலீசார் இன்று காலை 6.20 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் வினோத் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது வினோத் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் ரவுடி வினோத் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், வினோத்தின் கால் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில், மயங்கி விழுந்த அவரை, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.