தேனி மாவட்டம், அரண்மனைபுதூரைச் சேர்ந்தவர் துர்க்கை அம்மாள். இவர் தன்னுடைய தந்தை பாண்டியன், பூர்வீக சொத்தை மகன், மகள்களுக்குத் தெரியாமல் வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து அவர் நீதிமன்றம் சென்றபோது அங்கிருந்த சக்திவேல் என்பவரிடம், `சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும், யாரைப் பார்ப்பது’ எனக் கேட்டிருக்கிறார்.

வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்து வழக்கறிஞர் போல் இருந்த அவர், “நானும் வழக்கறிஞர்தான். இந்த வழக்கை உங்களுக்கு முடித்துக் கொடுத்து சொத்தை மீட்டுத் தருகிறேன்” எனக் கூறியிருக்கிறார். இதை நம்பிய துர்க்கை அம்மாள் அவரிடம், முதலில் வழக்கு பதிவுசெய்ய 3,000 ரூபாயும், அதனைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் கழித்து வழக்கு விசாரணை நடத்த 25,000 ரூபாயும் என இரண்டு முறையாக மொத்தம் 28,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்.
ஆனால், பணம் கொடுத்து ஒரு வாரம் ஆகியும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு எதுவும் செய்யாமல், சக்திவேல் காலதாமதம் செய்துவந்திருக்கிறார். இதையடுத்து துர்க்கை அம்மாள் நீதிமன்றத்துக்கு வந்து சக்திவேலிடம், `வழக்கு பதிவுசெய்யவில்லை என்றால், நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார்.

அப்போது சக்திவேல், தகாத வார்த்தைகளால் திட்டி, `பணம் கேட்டு வந்தால் உன்னைக் கொலைசெய்து விடுவேன்’ என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து , துர்கை அம்மாள் நீதிமன்றத்திலுள்ள வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து நடந்ததை தெரிவித்திருக்கிறார். வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இது குறித்து விசாரித்தபோது, சக்திவேல் என்பவர், வழக்கறிஞரே இல்லை, என்பதும், வழக்கறிஞர் போல் நடித்து நீதிமன்றத்துக்கு வந்த பெண்ணிடம் 28,000 ரூபாய் பணத்தை ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் பார் கவுன்சில் நிர்வாகிகள் போலி வழக்கறிஞர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில், பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் போலி வழக்கறிஞர் சக்திவேலை கைது சிறையில் அடைத்தனர்.