தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள
உதயநிதி ஸ்டாலின்
தனது முதல் அரசுமுறை பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லிக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள உதயநிதி அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்து பிரதமர் மோடியை சந்திப்பது இந்த பயணத்தின் அஜெண்டாவாக இருந்தது.
மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லிக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் டெல்லி தமிழ்ச்சங்கத் தலைவர்களை சந்தித்தார். அதன்பிறகு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி பூஜா-சிவம் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து கடிதத்தையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சந்தித்தார். அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.
உதயநிதியின் இந்த டெல்லி பயணம் அரசுமுறையாக சொல்லப்பட்டாலும் அரசியல் ஆதாயம் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். புதிதாக தொடங்கவிருக்கும் ‘பிளாக் ஷீப்’ டிவியின் விவகாரங்கள் குறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய விசாரணையே பிரதமரை சந்திக்க உதயநிதியை தூண்டியதாக சொல்கிறார்கள். ஏனென்றால், அறிவாலயத்தைச் சேர்ந்த கதிர் நெட்வொர்க் மூலம் இந்த சேனல் நடத்தப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.