பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வரும் என்ற நம்பிக்கையை நிதர்சனமாக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாக சூசக தகவல்கள் வந்துள்ளன. அதன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசின் ஒரு அறிக்கையின் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதிய ஓய்வூதிய திட்டத்துடன் ஒப்பிடும்போது, பழைய ஓய்வூதிய முறை பயனாளிக்கு அதிக பலன்களை அளிக்கிறது. ஆனால், மக்களுக்கு அதிக பலனளிக்கும் இந்தத் திட்டம், அரசுக்கு கடும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதால் மத்திய மாநில அரசுகள், பழைய ஓய்வூதிய முறையை கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகின்றன.
இந்த நிலையில், பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் அதே நேரத்தில், பல மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
இதற்கிடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் மத்திய அரசு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், தமிழ்நாடு அரசு,ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்களை மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிஅது.
ஒட்டுமொத்த நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, புதிய ஓய்வூதிய முறையில் பல சலுகைகளை வழங்க மோடி அரசு பரிசீலிக்கலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பழைய ஓய்வூதிய கொள்கை பரிசீலனை முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
2004 ஆம் ஆண்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டமான ’தேசிய பென்சன் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது.
பணியாளர்களின் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் அரசுப் பணியாளர்கள் சுட்டிக்காட்டும் குறைகளாக இருக்கிறது.
அரசுப் பணியாளர்களின் அதிருப்தியை போக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டைப் போலவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த பல மாநிலங்களும் உத்தேசித்துவருவதாகவும் கூறப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், புதிய ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.