வேதாரண்யம் : பருவம் தவறி பெய்த மழைக்கு பின் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மீண்டும் துவங்கி உள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் பாத்திகள் மூன்றாவது முறையாக சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்திக்கான பணிகளான பாத்தி அமைத்தல் முழு வீச்சில் துவங்கி நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது உப்பு எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உப்பு உற்பத்தி ஜனவரி மாதமே துவங்கியதால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பை உற்பத்தி இலக்கை எட்ட வாயப்பு இருந்த நிலையில், பருவம் தவறி பெய்த மழையால் இரண்டு மாதம் முற்றிலும் உப்பு உற்பத்தி பாதித்தது. இதனால் உப்புக்கு நல்ல விலை இருந்தும் உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதனால் உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு, பகல் பாராமல் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.