வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெஹ்ரான்- பள்ளிக்குச் செல்வதை தடுக்க மாணவியருக்கு விஷம் வைத்த சம்பவம் ஈரானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் இஸ்லாமிய பழமைவாதிகள், பெண்களுக்கு எதிரான பல சட்டங்களை பிறப்பித்து வருகின்றனர். பெண்கள் கல்வி கற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலை மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான, ‘ஹிஜாப்’ அணியாத பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதைக்கண்டித்து போராட்டம் நடத்திய மாஷா அமினி என்ற இளம்பெண் சில மாதங்களுக்கு முன், உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் ஈரான் முழுதும் தீவிரம் அடைந்தது.
மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த போராட்டத்தில், 300-க்கும் மேற்பட்டோர் அரசால் கொல்லப்பட்டனர். மேலும், 15 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்திய பலருக்கு துாக்கு தண்டனை விதித்து ஈரான் அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கோம் என்ற பகுதியில் மூன்று மாதங்களாக, பள்ளி மாணவியருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, சுவாசக் கோளாறு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் மாணவியர் ரத்தத்தில் விஷம் கலந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. மாணவியர் விஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதை அந்நாட்டு கல்வித்துறையும் உறுதி செய்துள்ளது.
கோம் பகுதியில் உள்ள பழமைவாதிகள் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க விஷம் வைத்ததாகவும் தகவல் வெளியாகி நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement