இரானில், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் கல்வியை தடுக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்படுவதாக, அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இரானில் உள்ள புகழ்பெற்ற கோம் நகரில், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லையென்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு சுவாசத்தை முடக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருந்தது.
கோம் நகரில் மட்டுமல்லாமல் இரானின் மற்ற நகரங்களிலும் இதுபோல் தொடர்ந்து விஷம் சாப்பிட்ட பெண் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து போதிய விசாரணை நடத்தப்படாத நிலையில், உள்ளூரை சேர்ந்த மதபோதகர்கள் தான், பெண் குழந்தைகள் படிக்கக்கூடாது என்பதற்காக படிக்கச் செல்லும் பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுப்பதாகத் தகவல் பரவியது.
இது தொடர்பாக, இரானின் துணைக் கல்வி அமைச்சர் யூன்ஸ் பனாஹி கூறுகையில், “அனைத்து பள்ளிகளும், குறிப்பாக பெண்கள் பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என்று சிலர் விரும்புவது கண்டறியப்பட்டது” என்றார்.
கடந்த ஆண்டு, பதின்பருவ பள்ளி மாணவிகள் பலரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதோடு, தங்கள் ஹிஜாப்களை அகற்றினர். போராட்டத்தின் போது அதிகாரிகள், அரசு எதிர்ப்பாளர்கள் பலரையும் கைது செய்தனர், அதே நேரத்தில் போராட்டத்தின் போது அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலில் மக்கள் பலர் இறந்ததாகக் கூறப்பட்டது. தொடர்ந்து, பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்கு 80 பாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது என பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நடந்துவரும் நிலையில், இப்போது இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்படுவதாக வெளியாகி இருக்கும் தகவல், அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.