டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கவும், வீடுகளுக்கு மதுபானங்களை நேரடியாக விநியோகம் செய்யவும் அதிகாலை 3 மணி வரை கடைகளை திறந்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். டெல்லி சிறப்பு நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமினில் விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிசோடியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் தனது துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ராஜினாமாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயினும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணீஷ் சிசோடியாவை தொடர்ந்து அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ராஜினாமாவையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றார்.