மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது.

இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கவும், வீடுகளுக்கு மதுபானங்களை நேரடியாக விநியோகம் செய்யவும் அதிகாலை 3 மணி வரை கடைகளை திறந்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பங்கஜ் குப்தா கூறும்போது, “புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்” என்று கோரினார்.

மணீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தயான் கிருஷ்ணன், மோகித் மாத்தூர், சித்தார்த் அகர்வால் ஆகியோர் கூறும்போது, “துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகே புதியமதுபான கொள்கை அமலுக்கு வந்தது. சிசோடியா நிதியமைச்சராக உள்ளார். அவர் டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியபொறுப்பு இருக்கிறது. இந்த வழக்கு சிசோடியாவுக்கு எதிரான சதித் திட்டம்’’ என்று வாதிட்டனர்.

4-ம் தேதி வரை…: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாக்பால், சிபிஐ கோரியபடி மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்படி மார்ச் 4-ம் தேதி வரை சிசோடி யாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சிசோடியா கைதை கண்டித்து தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டங்களை நடத்தினர்.

சிபிஐ விளக்கம்: சிபிஐ வட்டாரங்கள் கூறிய தாவது: மணீஷ் சிசோடியா உட்படவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 36 பேர் அடிக்கடி மொபைல் போன்களை மாற்றியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் மட்டும் சிசோடியா 18 மொபைல் போன்களையும் 4 சிம்கார்டுகளையும் பயன்படுத்தியுள்ளார். அவற்றை உடைத்து அழித்துள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் ஊழலில் தொடர்பிருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.