அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `அண்ணாமலை ஒரு கன்னத்தில் அறைந்தால்… மறுகன்னத்தை காட்ட இயேசு நாதர் இல்லை. திருப்பி அடிப்போம்’ எனச் சொல்லியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, ”இவ்வளவு வீரவசனம் பேசறீங்களே. தமிழக பா.ஜ.க-வின் உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்று நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்க வேண்டும். பில் கேட்டேன். அதையும் கொடுக்கவில்லை.
வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்கள் கொடுப்பதைப் பற்றியும் பேசியிருக்கிறார். அந்த நபர் அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தார். பணம் கொடுத்தும் எடுபடாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்.
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அவரும் மொடக்குறிச்சியில் என்ன கொடுத்து எப்படி வந்தார் என்பதை அவரும் உணர்ந்து பார்க்க வேண்டும்.
பொதுவெளியில் நாம் ஒரு கருத்தை சொல்லும்போது நாம் சார்ந்திருக்கிற இயக்கத்தின் நிலை என்ன என்பது குறித்து யோசித்துப் பேச வேண்டும். எங்களிடம் கேள்வி கேட்டு, கேட்டு இல்லாத ஒரு மனிதரை, இல்லாத கட்சியை, நோட்டாவுடன் போட்டி போடக்கூடியவர்களை செல்வாக்குமிக்க நபர்கள் போல மாயத்தோற்றத்தை உருவாக்கும் முயற்சிக்கு துணை போக வேண்டாம்” என்றார்.