2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை வென்றார் மெஸ்சி..!

பாரிஸ்,

சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் லியோனெல் மெஸ்சி தட்டி சென்றார். சிறந்த வீரருக்கான போட்டியில் ஃபிரெஞ்சு முன்கள் வீரர்களான கிலியன் எம்பாப்பே, கரீம் பென்சமாவை தோற்கடித்து இந்த விருதை 35 வயதான மெஸ்ஸி பெற்றுள்ளார்.

கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.