சென்னையில் 9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள பரபரப்பான சூழலில் வரும் 9-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.

இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடியபோது, ஜூலை 11-ம் தேதிநடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. தீர்மானங்கள் செல்லுமா என்பது குறித்து தீர்ப்பில் எதுவும் கூறப்படாததால் இரு தரப்புக்கும் தெளிவான தீர்வை தரவில்லை என்பது அதிமுகவினரின் ஆதங்கமாக உள்ளது.

இந்நிலையில் இத்தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்தஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில்65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது.

இத்தகைய சூழலில், வரும் 9-ம் தேதி கட்சி தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இக்கூட்டம் சென்னைராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி, பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள புதிய வழக்கை எதிர்கொள்வது, பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.