திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே அரண்மனை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மகன் சரவணன். இவர் குமுளூர் பகுதியில் உள்ள லால்குடி அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் சரவணன் இன்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது சரவணனும் மற்றொருவரும் சேர்ந்து ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தால், இருவரும் நீரில் மூழ்கினர்.
இதைப்பார்த்த மற்ற இளைஞர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஒருவரை மட்டுமே அவர்கள் காப்பாற்றி உள்ளனர். மேலும், சரவணன் மட்டும் நீரில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து, இளைஞர்கள் அனைவரும் கரைக்கு வந்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பலமணி நேரம் போராடியும் இளைஞரின் நிலை குறித்து தெரியாததால், பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுகின்றனர். கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.