விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கடந்த 2018-ம் ஆண்டு தலைவர், துணைத் தலைவர் உட்பட 17 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக்குழு தேர்வுசெய்யப்பட்டது. இந்த நிர்வாகக் குழு 2020, 202-ம் ஆண்டுகளில் விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனத்துக்கு விற்பனை மேலாளர், பொறியியல் மேலாளர், 3 இடங்களுக்கு விற்பனை துணை மேலாளர்கள், பால் பதப்படுத்துதல், பண்ணை வேதியிலாளர், நுண் உயிரியலாளர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு தலா ஒரு துணை மேலாளர், 8 ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர், தனி செயலாளர் (தரம்), தட்டச்சர் உள்ளிட்ட 25 பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வுசெய்தது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட ஆவினில் புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் கூட்டுறவு சங்க விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். மாவட்ட பால்வளத்துறை சார் பதிவாளர் ஆவின் பணி நியமனம் குறித்து விசாரணை நடத்தி ஜூலை 27- ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் பால்வளத்துறை ஆணையர் விருதுநகர் மாவட்ட ஆவினில் விதிகளுக்கு மாறாக நியமிக்கப்பட்ட 2 மேலாளர்கள், 6 துணை மேலாளர்கள் உட்பட 25 பேரின் பணி நியமனங்களை ரத்துசெய்யக்கோரி 2022 டிசம்பர் 28-ம் தேதி மாவட்ட பொது மேலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஜனவரி 4-ம் தேதி 25 பேரின் பணி நியமன உத்தரவை ஆவின் பொது மேலாளர் ரத்துசெய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பால்வளத்துறை ஆணையர் சுப்பையன், விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாகக் குழுவை கலைத்து மார்ச் 16-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து விருதுநகர் மாவட்ட ஆவின் நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, பணி நியமனம் ரத்துசெய்யப்பட்டதற்கு எதிராக 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், 9 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.