எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நிஜமான மையம் காங்கிரஸ்: சசிதரூர் கருத்து

புதுடெல்லி:‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரஸ் இருக்கும்’ என சசிதரூர் கூறி உள்ளார். காங். மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சசிதரூர் அளித்த பேட்டி: ராகுல் தகுதி நீக்க விவகாரம் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை அலையை உருவாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. ‘ஒன்றுபட்டால் நிலைத்திருப்போம்; பிரிந்தால் வீழ்வோம்’ என்ற பழமொழியின் உண்மையை பல கட்சிகள் உணரத் தொடங்கி உள்ளன. ராகுலை இப்போது ஆதரிக்கவில்லை என்றால், அடுத்ததாக பழிவாங்கும் அரசால் ஒவ்வொருவராக குறிவைக்கப்படுவார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன.

எதிர்க்கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்று வாக்குகளை பிரிப்பதை நிறுத்துவதற்கான புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்திருந்தால், 2024 மக்களவை தேர்தலில் பாஜ வெல்வது மிகவும் கடினமாக இருக்கும். பிராந்திய கட்சிகள் அந்தந்த மாநிலங்களிலோ அல்லது 2 மாநிலங்களிலோ வலுவாக இருக்கலாம். ஆனால், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் உண்மையான மையமாக காங்கிரசே இருக்கும்.

அவ்வாறு எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்தால், நாங்கள் சிறிய கட்சிகளையும் ஊக்கப்படுத்தும் ஒருங்கிணைப்பாளராகவே இருப்போம். இந்தியாவின் மீதான சர்வதேச நாடுகளின் கவனமும், இந்தியாவுக்கு எதிரான எதிர்மறையான ஊடகங்களும் பிரதமர் மோடிக்கோ அவரது அரசுக்கோ நிச்சயம் ஆச்சரியமாக இருக்காது. இந்த அரசாங்கத்தின் ஜனநாயக நற்சான்றிதழ்கள் குறித்த சந்தேகங்கள் சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.