தமிழகம், புதுச்சேரியில் போலி நகை அடமானம் – பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பணிநீக்கம்

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் போலி நகை அடமானம் வைத்து பல கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோமை பணி நீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்கால் ராஜாத்தி நகரைச் சேர்ந்த கைலாஷ் என்பவர், பெரமசாமிப் பிள்ளை வீதி நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் போலி நகைகளை விற்க முயன்ற சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையை விற்க வந்தோரை கைது செய்து போலீஸார் விசாரித்தனர்.

இவ்விசாரணையில் ஏற்கெனவே மோசடி வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் ஜெஸ்மாண்ட், அவரது பெண் நண்பர் புவனேஸ்வரி ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ஜெரோம் ஜெஸ்மாண்டை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் சுமார் ரூ.8லட்சம் மதிப்பில் போலி நகை அடகு வைக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் சார்பில் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவத்திலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் காரைக்கால் மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் அடகுக் கடைகள், வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்றிருப்பதாக போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம், அவரது பெண் நண்பர் புவனேஷ்வரி உட்பட பத்து பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போலி நகை அடமானம் வைத்த மோசடி வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோமை பணி நீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜெரோம் தற்போது சிறையில் உள்ள நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை சிறைதுறையிடம், காவல்துறையினர் அளித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.