புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசின் ஒன்பது ஆண்டு ஆட்சியில் அமலாக்கத்துறை ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அமலாக்க இயக்குனரகத்தின் அதிரடி சோதனைகளால், அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் ஏராளமான பணமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அரசியல் தலைவர்கள் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 500 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஒன்றிய நிதி அமைச்சக தகவலின்படி, கடந்த 2018-19 மற்றும் 2021-22ம் ஆண்டுகளுக்கு இடையில் (கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்), அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 505 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2018-19ல் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2021-22ல் 1,180 வழக்குகளாக அதிகரித்துள்ளன. அதேநேரம் அமலாக்கத்துறை நடத்திய சோதனை எண்ணிக்கையானது 2004-14 மற்றும் 2014-22ம் ஆண்டுக்கு இடையில் 2,555 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2004-14ம் ஆண்டுக்கு இடையில் 112 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
ஆனால் 2014-22ம் ஆண்டுக்கு (ஒன்றிய பாஜக ஆட்சி) இடையில், 2,974 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது சோதனைகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற சோதனைகள் மற்றும் வழக்குகளின் அடிப்படையில் ரூ.95,432.08 கோடி மதிப்புள்ள ெசாத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த புள்ளிவிவரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.