
'உயிர், உலகம்' என பெயர் வைப்பதில் என்ன தவறு ?
பிரபலங்களாக இருந்தாலே இந்த சமூக வலைத்தள யுகத்தில் எல்லாவற்றிற்கும் 'டிரோல்' செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் சினிமா பிரபலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். முன்னணி பிரபலமாக இருந்தால், அதிலும் நடிகையாக இருந்தால் 'டிரோல்' என்ற பெயரில் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் பலர் கிண்டலடிப்பது வாடிக்கையாகிவிட்டது.
அப்படி ஒரு 'டிரோல்' விவகாரம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழந்தைகளின் பெயர் அறிவிப்பில் இன்று இப்போது நடந்து வருகிறது. தங்களது குழந்தைகளுக்கு ''உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்,” எனப் பெயர் வைத்துள்ளதாக இன்று விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்தார்.
அது என்ன 'உயிர், உலக்' என ஒரு சிலர் அந்த சிறு குழந்தைகளின் பெயர்களையும் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். 'உயிர்' என்றால் என்னவென்பது அனைவருக்கும் தெரியும், 'உலகம்' என்பததைத்தான் 'உலக்' என வைத்துள்ளார்கள்.
'N' என்பது நயன்தாரா பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் பெயர், விக்னேஷ் சிவன் என்ற பெயரில் சிவன் என்பதைத்தான் இரண்டு குழந்தைகளின் பெயர்களுக்குப் பின்னாலும் சேர்த்துள்ளார்கள்.
அப்பா பெயரை மட்டும் குழந்தைகளின் பெயர்களுக்குப் பின்னால் சேர்த்த காலம் மாறி அம்மாவின் பெயரையும் சேர்ப்பது இன்றைய காலம். அந்த வழியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் அவர்களது குழந்தைகளுக்குப் பெயர் வைத்துள்ளார்கள். இதையும் கிண்டல் மனோபாவத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களை என்னவென்று சொல்வது ?.