“என்னை அப்படி பேசவைத்தார்கள்; என் மகனின் பற்களை உடைத்தது பல்வீர் சிங்தான்!” – பெண் `பகீர்'

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சப்-டிவிஷனில் ஏ.எஸ்.பி-யாகப் பணியாற்றிய பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைக் கொடூரமாகப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும், சப்-கலெக்டர் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஏ.எஸ்.பி-க்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர்

இந்த நிலையில், ஏ.எஸ்.பி-க்கு ஆதரவாக போலீஸார் சாட்சியங்களைக் கலைக்கும் பணியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மீண்டும் இதே சரகத்தில் ஏ.எஸ்.பி-யை பணியமர்த்த வலியுறுத்தி கிராமப் பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னணியில் போலீஸார் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனிடையே, சாட்சியம் அளிப்பவர்களுக்குப் பணம் கொடுப்பதாக பேரம் நடந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிலரே வெளிப்படையாகத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார்கள்.

ஏ.எஸ்.பி பல்வீர் சிங்குக்கு ஆதரவாக வீடியோக்களும் வெளியிடப்பட்டன. அதன் பின்னணியிலும் காவல்துறையினர் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அதில் பேசிய பலரும், “ஏ.எஸ்.பி நல்லவர். அவர் பொறுப்பேற்ற பிறகுதான் இந்தப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீரடைந்தது. நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்” என்கிற ரீதியில் அந்த வீடியோவில் ஆண்கள், பெண்கள் எனப் பலரும் பேசியிருந்தனர்.

அருண்குமார் தாய் ராஜேஸ்வரி வெளியிட்ட புகைப்படம்

இந்த நிலையில், வீடியோவில் பேசிய ராஜேஸ்வரி என்பவர், தன்னை போலீஸார் அது போன்று பேச வைத்ததாக வெளிப்படையாக குற்றம்சாட்டியிருக்கிறார். அத்துடன், தன்னுடைய மகன் அருண்குமாரைத் தாக்கிப் பற்களை உடைத்தது ஏ.எஸ்.பி பல்வீர் சிங்தான் என்றும் அவர் தெரிவித்தார். பல் உடைக்கப்பட்டதற்கான ஆதாரமாக புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.

அரசு ஊழியரான தன்னுடைய கணவரின் நலன் கருதி இதுவரை பொறுமையாக இருந்ததாகத் தெரிவித்த அவர், தனது குடும்பத்தை போலீஸார் தொடர்ந்து மிரட்டியதால் தற்போது இந்த விவகாரத்தை வெளியில் சொல்வதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.