நாடு முழுவதிலும் நகரப் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் இவை அமைக்கப்படுகின்றன. இந்த சுங்கச்சாவடிகளை அமைக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்களுக்கு அதில் சுங்கவரி வசூல் செய்ய உரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான நிலங்கள், விவசாயிகள் மற்றும் இதர பொதுமக்களிடம் இருந்து அரசால் கையகப்படுத்தப்படுகிறது.
இதற்காக அரசு நிர்ணயிக்கும் விலை மட்டுமே நிலம் அளித்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த முறையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புறவழிச்சாலைகள் அமைக்க நிலம் அளிப்பவர்களுக்கு அதற்காக அரசு நிர்ணயித்த விலையுடன் அங்கு அமைக்கப்படும் சுங்க வரியிலும் ஒரு குறிப்பிட்ட பங்கு அளிக்கப்பட உள்ளது. இந்த அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியால் இந்த புதிய யோசனை விவசாயிகள் நலனுக்காக முன் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அப் புறவழிச் சாலையை சுற்றி அமைக்கப்படும் குடியிருப்புகள் மட்டும் வணிக ரீதியிலான கட்டிடங்களிலும் பங்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய தரை வழிப்போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறும் போது,இதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பொதுப் பணித் துறையுடன்(பி.டபுள்.யூ.டி) எங்கள் அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது. பிறகு இத்திட்டம் சோதனை அடிப்படையில் ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் அமலாக்கப்பட உள்ளது. இதன்பிறகு உத்தரப்பிரதேச புறவழிச்சாலைகளில் அன்றாடம் 20,000 வாகனங்கள் கடக்கும் சுங்கச்சாவடிகளிலும் இந்தமுறை படிப்படியாக அமலாக உள்ளது எனத் தெரிவித்தனர்.