புதுடெல்லி: மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு (சிஏடி) நாடாளுமன்றக் குழு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் 1,350 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஓய்வூதியம் மற்றும் மூத்த குடிமக்கள் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உரிய தீர்வு காணப்பட வேண்டும். இந்த தீர்ப்பாயத்தின் வெவ்வேறு அமர்வுகளில் 80,545 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (செயல்முறை) விதிகள், 1987-ன் படி, ஒவ்வொரு விண்ணப்பமும் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முடிந்தவரை விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், தீர்ப்பாயத்தில் சில அமர்வுகளில் உறுப்பினர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை. அதே போன்று, அமர்வுகளின் எண்ணிக்கையும் உரிய அளவில் அதிகரிக்கப்படவில்லை. இதுவும் நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகியுள்ளது.
அலகாபாத், பெங்களூரு, ஹைதராபாத், ஜம்மு மற்றும்பாட்னா அமர்வுகள் அனுமதிக்கப்பட்ட பலத்தில் 50 சதவீதத்துடன்தான் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.