சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாகிறது.
ராகவா லாரன்ஸ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்தப் படத்தை கதிரேசன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், ருத்ரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி கொடுக்கவிருப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
அவரின் இந்த செயல் பாராட்டை பெற்றாலும், நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சர்ச்சையில் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் நாளை வெளியாகிறது. ராகவா லாரன்ஸுடன் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில், ராகவா லாரன்ஸ் உட்பட ருத்ரன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை விஜய் டிவி பாலா தொகுத்து வழங்கினார். அப்போது தனது தாயாரை மேடைக்கு அழைத்த ராகவா லாரன்ஸ், பாலாவிற்கு 10 லட்சம் நன்கொடை வழங்கினார். பாலா தனது சொந்த செலவில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அதற்காக ராகவா லாரன்ஸும் பாலாவிற்கு நிதி வழங்கினார்.
அதேபோல், 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி வழங்கவிருப்பதாகவும், ராகவா லாரன்ஸ் மேடையிலேயே அறிவித்தார். மேலும், இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆசி வேண்டும் எனவும் அவர் டிவீட் செய்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், “நல்ல படம் குடுங்க அது போதும், இப்படி நல்ல விஷயங்கள ‘Cover up’-ஆக பயன்படுத்தாதீங்க” என கூறி வருகின்றனர்.

படங்கள் வெளியாகும் போது இப்படி அறிவிப்பது தனக்கு தானே ப்ரொமோஷன் செய்துகொள்வதை போல உள்ளது. உதவி செய்ய வேண்டும் என நினைத்துவிட்டால் அதனை மறைமுகமாகவே செய்யலாம். இப்படி தேவையில்லாமல் அந்த குழந்தைகளை மேடையில் ஏற்றி அவர்களுக்கு உதவுகிறேன் என்பது சுத்த விளம்பரமே என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை தத்தெடுப்பதும், அவர்களுக்கு கல்வி வழங்குவதும் பாராட்ட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், இப்படி படத்தின் ப்ரொமோஷனுக்காக வைரலாக்க வேண்டாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளை மேடையில் ஏற்றி சிம்பதி கிரியேட் செய்வதால் ருத்ரன் படம் ஓடும் என நினைக்க வேண்டாம் எனவும் அவர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதேநேரம், ராகவா லாரன்ஸ் ஆரம்பம் முதலே இப்படியான உதவிகளை செய்துவருபவர் தான். அதனால், தேவையில்லாமல் அவரது உதவும் குணத்தை சந்தேகிக்க வேண்டாம். மேலும், ராகவா லாரன்ஸ் இப்படி உதவுவதால் யாரும் ருத்ரன் படத்தை தியேட்டரில் போய் பார்க்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சந்தேகத்துடனே பார்க்க வேண்டாம் என, ராகவா லாரன்ஸுக்கு ஆதாரவாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களின் இந்த கமெண்ட்ஸ் பப்ளிசிட்டியாக மாறிவிட்டது. மேலும், தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.