மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் மும்பை – புனே நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர் 27 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து விபத்துப் பகுதியை நேரில் ஆய்வு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் சோம்நாத் கார்கே கூறுகையில், “தனியாருக்குச் சொந்தமான பேருந்தில் பாரம்பரிய இசைக்குழு கலைஞர்கள் பயணித்தனர். அவர்கள் அனைவரும் புனேவில் ஒரு நிகிழ்ச்சியை முடித்துக் கொண்டு மும்பை சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் பேருந்து ஷிங்ரோபா கோயில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர் விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்தவர்களில் 12 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து கோப்போலி காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்” என்றார்.
உயிரிழந்த, காயமடைந்த நபர்களில் பெரும்பாலானோர் கோரேகான் பகுதியின் சியான் எனுமிடத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் பால்கார் மாவட்டம் விராரைச் சேர்ந்தவர்களாவர். காயமடைந்தவர்களுக்கு கோப்போலி கிராமப்புற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.