அப்பாடா, கோடை வெயிலை தணிக்க வரும் மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “இன்று (ஏப்ரல் 17) முதல் ஏப்ரல் 19 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
ஏதுமில்லை.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
(சென்டிமீட்டரில்):

பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 1.

வெப்பநிலை பற்றிய குறிப்பு :

அதிகபட்ச வெப்பநிலை: கரூர் பரமத்தியில் 40.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இயல்பை விட 3.1 ° செல்சியஸ் முதல் 5.0 ° செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.

சென்னை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், ராமநாதபுரம், வேலூர், ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 1.6° செல்சியஸ் முதல் 3.0° செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.