காமவெறினு சொல்றாங்க! எம்பொண்ணுக்கு நீதி வேணும்.. கிருஷ்ணகிரி சம்பவத்தில் கதறும் பெண்ணின் தாய்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகனை தந்தையே வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மகனை திருமணம் செய்த பெண் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷ்(25) உடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெணியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடன் வேலை பார்த்து வந்த அனுஷயா எனும் வேறு சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் சுபாஷுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பேசி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது.

சுபாஷும், அனுஷயாவும் காதலிக்க தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில்தான் இந்த விவகாரம் குறித்து சுபாஷின் வீட்டில் தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது தந்தை தண்டபாணி எதையும் பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. மறுபுறம் மகன் சுபாஷுக்கு தனது சமூகத்தில் வேறு ஒரு பெண்ணை தேட தொடங்கியுள்ளார். ஒருபுறம் சுபாஷின் காதல் மறுபுறம் தண்டபாணியின் பெண் பார்க்கும் படலம் என நீண்டுக்கொண்டிருக்கையில் ஒருநாள் இது பிரச்னையாக வெடித்திருக்கிறது.

தான் பார்த்த பெண்ணைதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தண்டபாணி கராறாக கூற, சுபாஷ் அதனை மறுத்து தன்னுடைய காதலி அனுஷயாவை இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். தண்டபாணிக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் சுபஷ் இது குறித்து கவலைப்படாமல் தனது மனைவியுடன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கையில் தனது பாட்டி அதாவது தண்டபாணியின் அம்மாவை சந்திக்க சுபாஷும் அனுஷயாவும் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனர்.

இதனை அறிந்துக்கொண்ட தண்டபாணி 15ம் தேதி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது மகனுக்கும் இவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகன் சுபாஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை அவரது தாய் தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் அவரையும் தண்டபாணி வெட்டி சாய்த்திருக்கிறார். பின்னர் மீதமிருந்த மருமகள் அனுஷயாவையும் வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மூவரையும் பரிசோதித்த மருத்துவர் சுபாஷ் மற்றும் அவரது பாட்டி இருவரும் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அனுஷயாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கோதண்டபாணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதபோல அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அனுஷயாவிடம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர்.

அப்போது மருத்துவமனையில் செய்தியாளரிடம் பேசிய அவரது தாய், தனது மகள் மீது அவதூறு சுமத்துவதாகவும், இந்த விவகாரத்தில் உரிய நீதி வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, “என் பொண்ணு தலையிலில, கழுத்துல, கையில வெட்டு காயம் இருக்கு. தலை முடிய புடிச்சு கத்திய வச்சு அறுத்து இருக்காங்க. வெட்டினது பாக்க குதறி வைச்சது மாதிரி இருக்கு. காமவெறியில் கல்லாயணம் பண்ணிகிச்சுனு அபாண்டமா பழி சொல்றாங்க. என் பொண்ணுக்கு நீதி கிடைக்கனும்” என பேட்டியளித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.