`இது ஒரு பொய் வழக்கு’ – கெஜ்ரிவால்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக வெளியான தகவல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் தான் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா மீது வழக்கு பாய்ந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜரான அவரை, பல மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்தது. இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், `இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என மத்திய அரசை சாடினார். இந்த நிலையில் இந்த வழக்கில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து, நேற்று மதியம் 12 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சுமார் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. இரவு 9 மணிக்கு வரை நீடித்த விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், “என்னிடம் 9 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். இது ஒரு பொய்யான வழக்கு. அவர்கள் ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் எங்களுடன் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை.” என்றார்.