பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு: ஒரு லிட்டர் ரூ.282-க்கு விற்பனை

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. அந்த நாட்டின் அன்னியசெலவாணி கையிருப்பு தீர்ந்துபோகும் நிலையில் இருக்கும் வேளையில், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தாா், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படுவதாக அறிவித்தார். மேலும் இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் அங்கு ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.282-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.293 என்ற விலையிலேயே உள்ளது.

அதே சமயம் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186-க்கு விற்பனையாகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.