
அவதூறு கருத்து பரப்பியதற்கு அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், திமுக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது, திமுகவின் இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம்.
இதனால் அமைப்புச் செயலாளர் என்ற முறையில், எங்கள் கட்சிக்காரர் உங்கள் மீது அவதூறுக்காக தகுந்த வழக்குத் தொடர உரிமை உண்டு. எனவே, திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பாக கூறிக்கொள்வது, உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார்.
இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை முன்வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி மூலம் அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில், ஆதாரமற்ற போலியான குற்றசாட்டை பரப்பியதற்கு ரூ.50 கோடி இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவதூறு கருத்துக்கு அண்ணாமலை 48 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in