லக்னோ: ‘‘உத்தர பிரதேசத்தில் இனி எந்த ரவுடியும் தொழிலதிபர்களை மிரட்டமுடியாது’’ என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமையுடன் கூறியுள்ளார்.
பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்காங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தின் லக்னோ மற்றும் ஹர் தோய் மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் தற்போது எந்த ரவுடியும் அல்லது மாபியா கும்பலும் தொழிலதிபர்களை போனில் மிரட்ட முடியாது. ஒருகாலத்தில் உத்தர பிரதேசம் வன்முறைக்கு பெயர்போன இடமாக இருந்தது. சில மாவட்டங்களின் பெயரை கேட்டாலே மக்கள் அச்சம் அடைந்தனர். தற்போது அதுபோல் பயப்படத் தேவை இல்லை.
2012-2017-ம் ஆண்டுகளுக்கு இடையே உத்தர பிரதேத்தில் 700 வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஆனால் 2017-2023-ம் ஆண்டுவரை எந்த ஊரடங்கும் பிறப்பிக் கப்படவில்லை. அதற்கான சூழல் ஏற்படவில்லை. ஆதலால் உ.பி.யில் தொழிற்சாலைகள் தொடங்கி முதலீடு செய்வதற்கு இது மிகவும் சாதகமான வாய்ப்பு. வலுவான சட்டம் மற்றும் ஒழுங்கு ஏற்பாட்டுக்கு உத்தர பிரதேசம் உத்திரவாதம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில், தொடர்புடைய உ.பி. முன்னாள் எம்எல்ஏ அத்தீக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவனது கூட்டாளி இருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். உமேஷ் பால் கடத்தல் வழக்கில் போலீஸ் காவலில் அனுப்பப்பட்ட அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் மற்ற குற்றவாளி களால் சமீபத்தில் சுட்டுக் கொல் லப்பட்டுள்ள நிலையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளார்.
61 மாபியாக்களின் பட்டியல் தயார்: உ.பி முன்னாள் எம்எல்ஏ அத்தீக் அகமது கும்பல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் 61 மாபியாக்களின் பட்டியலை உ.பி. போலீஸார் தயார் செய்துள்ளனர். இவர்களின் ரூ.500 கோடி மதிப்புடைய சொத்துக்களை முடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இவர்கள் மீது நடவடிக்கை பாயும் என நம்பப்படுகிறது.
சாராய கடத்தல், மர கடத்தல், மணல் கடத்தல், கால்நடை கடத்தல் போன்றவற்றில் ஈடுபடும் மாபியா கும்பலின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக உ.பி சட்டம் ஒழுங்கு சிறப்பு தலைமை இயக்குனர் பிரசாந்த் குமார் கூறியுள்ளார். இந்த பட்டியலில் சுல்தான்பூர் பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் சுதாகர் சிங், சஞ்சய் பிரதாப் சிங் ஆகியோர் உள்ளனர். இந்த அறிவிப்பு உத்தர பிரதேசத்தில் உள்ள ரவுடி கும்பலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.