காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி-யுமான ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு கர்நாடக தேர்தல் பரப்புரையின் போது, மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாகத் குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை 3 ஆண்டுகளாக விசாரித்த நீதிமன்றம், கடந்த மாதம் ராகுல் காந்தியைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது. அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மக்களை உறுப்பினர் பதவியையும் இழந்தார். மேலும், 20 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு இல்லத்தையும் காலிசெய்து, சோனியா காந்தியின் வீட்டில் வசிக்கிறார்.
இதற்கிடையே, சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ‘இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்தாலும், எனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து விசாரணையைத் தொடருங்கள்’ என மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணைக்குப்பிறகு சூரத் அமர்வு நீதிமன்றம் இன்று இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அவருக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்திருக்கிறது.
எனவே, இந்த தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்துக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோ சென்று தண்டனையை நிறுத்தி வைக்க மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால் அவர் சிறைக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.