இந்தியத் திரையுலகத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்
'பாகுபலி, டங்கல்' ஆகிய படங்கள் வெளிவந்த பிறகு இந்தியத் திரையுலகமும் 1000 கோடி வசூலை எளிதில் கடக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு வெளிவந்த மாநில மொழிப் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப்' ஆகிய படங்கள் எளிதாக 1000 கோடியைக் கடந்தன. 'விக்ரம், பொன்னியின் செல்வன் 1,' ஆகிய தமிழ்ப் படங்களும், 'காந்தாரா' கன்னடப் படமும் தனித்தனியாக மொத்தமாக 500 கோடி வசூலைக் கடந்தன. 'பதான்' ஹிந்திப் படம் 1000 கோடி வசூலைக் கடந்தது.
அந்த விதத்தில் இந்த வருடம் வெளிவர உள்ள சில படங்கள் 1000 கோடியைக் கடக்கும் படங்களாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே இல்லையென்றாலும் அவை 500 கோடியைக் கடப்பது உறுதி என்றுதான் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்', ஷாரூக்கான் நடித்து வரும் 'ஜவான்', ஆகிய படங்கள் 1000 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது. தமிழில் 'பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, ஜெயிலர், லியோ' ஆகிய படங்களும் தெலுங்கில், 'புஷ்பா 2, கேம் சேஞ்சர்' ஆகிய படங்களும், கன்னடத்தில் 'காந்தாரா 2' ஆகிய படங்களும் 500 கோடியைக் கடக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
இதுநாள் வரையில் 100 கோடி என்பது பெரும் சாதனையாக இருந்தது. அந்த சாதனை இனி 1000 கோடி என மாறிவிடும். இடையில் சில பல 300 கோடி, 500 கோடி படங்கள் அவ்வப்போது வரலாம் என்ற நிலைக்கு இந்தியத் திரையுலகம் மாறிவிட்டது. தமிழில் எந்தப் படம் முதல் 1000 கோடி வசூலைத் தொடப் போகிறது என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.