இந்தியா வருகிறார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ 

கராச்சி: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ வரும் மே 4-ஆம் தேதி இந்தியா வருகிறார். 2014-ல் நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்தபோது அவர் இந்தியா வந்தார். அதன்பின்னர் இந்தியா வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலாவல் பூட்டோ இந்தியா வருகிறார். இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் கோவா மாநிலத்தில் வரும் மே 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ கலந்து கொள்கிறார். பாகிஸ்தான் குழுவிற்கு அவர் தலைமை தாங்கிச் செல்கிறார். வெளியுறவு அமைச்சர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கோட்பாடுகளை பாகிஸ்தான் எவ்வளவு மதிக்கிறது என்பதற்கும் இந்தப் பிராந்தியத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கும் எடுத்துக்காட்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. அப்போதே இந்த ஆண்டுக்கான மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் மே மாதம் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மாநாடு கோவாவில் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.