“காங்கிரஸ் அமைச்சர் எங்களைக் கொடுமைப்படுத்தினார்"- வீடியோ பதிவுசெய்துவிட்டு ராஜஸ்தான் நபர் தற்கொலை

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் பல மாதங்களாகவே உட்கட்சி மோதல் நீடித்துவருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் காங்கிரஸில் இது பின்னடைவை ஏற்படுத்தும் கூறப்பட்டுவருகிறது.

தற்கொலை செய்துகொண்ட ராம் பிரசாத் மீனா – ராஜஸ்தான்

காங்கிரஸின் இத்தகைய நெருக்கடியான சூழலுக்கிடையில், 38 வயது நபர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடனான நிலப் பிரச்னையில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் தன்னையுடைய சொத்திலிருந்து வெளியேறச் சொல்லி வற்புறுத்தியாக வீடியோ பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராம் பிரசாத் மீனா என்றறியப்படும் அந்த நபர், “கேபினட் அமைச்சர் மகேஷ் ஜோஷி, அவருடைய கூட்டாளிகளால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். அவர்கள் என்னையும் எனது குடும்பத்தினரையும் மிகவும் துன்புறுத்தியிருக்கின்றனர். இதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இது குறித்து அமைச்சர் மகேஷ் ஜோஷி, “இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எந்த விசாரணைக்கும் நான் தயார். தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். அதே சமயம் தற்கொலை செய்துகொண்டவரின் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி கிரோரி லால் மீனா, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்திவருகின்றார்.

காங்கிரஸ் மகேஷ் ஜோஷி

மேலும் பா.ஜ.க தலைவர்கள் பலரும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரி அமைச்சர் மகேஷ் ஜோஷியை பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர். அதோடு, இதுவொரு சோகமான நிகழ்வு என்றும், போலீஸ் இதில் காலக்கெடுவுடன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சச்சின் பைலட் கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே அசோக் கெலாட் Vs சச்சின் பைலட் விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த விவகாரம் காங்கிரஸுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.