பட்டினி கிடந்து 58 பேர் தற்கொலை: பாதிரியார் மீது கென்ய அதிபர் காட்டம்| 58 people commit suicide due to starvation: Kenyan president blames priest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நைரோபி : கென்யாவில் பாதிரியார் ஒருவரது பண்ணையில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயேசுவை அடைவதற்கு பட்டினி இருக்கும்படி அவர் கூறியதை கேட்டு நடந்ததால், இவர்கள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. ‘இது ஒரு பயங்கரவாதம்’ என, அந்த நாட்டின் அதிபர் காட்டமாக கூறியுள்ளார்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட கிறிஸ்துவ மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெக்கன்சி என்பவர் உள்ளார். அவருக்கு சொந்தமான, 800 ஏக்கர் பண்ணையில் 15க்கும் மேற்பட்டோர் உடல் மெலிந்து இருப்பதாகவும், அவர்களில் சிலர் இறந்து விட்டதாகவும் கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு உடல் மெலிந்திருந்த எட்டு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதைத் தவிர, அந்த பண்ணையில், 50 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அங்கு மேலும் பலர் புதைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் இவரது போதனையில் பட்டினி கிடந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இயேசுவை அடைவதற்கு பட்டினி இருக்கும்படி இவர் கூறியதை பின்பற்றியதால், இவர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

latest tamil news

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு அதிபர் வில்லியம் ரூடோ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கென்யாவின் முதல் கிறிஸ்துவ அதிபரான அவர் நேற்று கூறியதாவது: இது மிகக் கொடூரமான விஷயம். பட்டினி போட்டு கொல்வது என்பது பயங்கரவாத தாக்குதலுக்கு இணையானது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.