மதுரை: மதுரையில் இருந்து சென்னை சென்ற தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: சுற்றுலா தலங்கள் மற்றும் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, பரவி வருவது வீரியமற்ற வைரஸ், பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
இந்திய அளவில் 11 ஆயிரம் எண்ணிக்கை வந்தாலும் தமிழ்நாட்டில் 500 வரை சென்று தற்போது குறைய தொடங்கியுள்ளது. போலி மருத்துவர்கள் தற்போது முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இது நீண்ட காலமாக இருந்தாலும், இந்த ஆட்சியில் தான் முறையாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தான் கடந்த வாரம் ஒரே நாளில் 73 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மாணவர்கள் மருத்துவப் படிப்பு தொடருவது குறித்து மத்திய அரசு அதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள ஹோமியோபதி கல்லூரி கட்டிடங்கள் சேதம் அடைந்திருப்பது, புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுவரை விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் படிக்க பரிசீலிக்கிறோம். முதலில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்துவிட்டால் புதிய ஹோமியோபதி கல்லூரிகள் துவங்குவது பற்றி யோசிக்கலாம்” என்றார்.