தீபாவளியை விட்டுக்கொடுக்க விரும்பாத கார்த்தி

நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த வருடம் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என மூன்று படங்கள் வெளியாகின. கார்த்தியின் திரையுலக பயணத்தில் மூன்று படங்கள் ஒரே வருடத்தில் வெளியானது இதுதான் முதல் முறை. மூன்று படங்களுமே கார்த்திக்கு வெற்றி படங்களாக அமைந்தன. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து ராஜமுருகன், டைரக்ஷனில் உருவாகி வரும் ஜப்பான் என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

அதே சமயம் தீபாவளி அன்று தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி அன்று வெளியாவதற்கு தயாராகி வருகின்றன. இதில் அயலான் திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இப்படி மூன்று படங்கள் பண்டிகை நாளில் ஒரே நேரத்தில் வெளியானால் மூன்று படங்களின் வசூலும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக இந்த மூன்று நடிகர்களின் படங்களையும் பொதுவான ரசிகர்கள் அனைவருமே பார்க்க விரும்புவார்கள். அதிலும் சிவகார்த்திகேயனுக்கு இது முதல் தீபாவளி ரிலீஸ் வேறு..

ஆனால் கார்த்தி ஏற்கனவே கைதி, சர்தார் ஆகிய படங்களை தீபாவளி பண்டிகையில் வெளியிட்டு வெற்றியை ருசித்துள்ளார். குறிப்பாக விஜய் நடித்த பிகில் படத்துடன் மோதி கைதி படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றவர். அதனால் தீபாவளி ரிலீஸை சென்டிமென்டாக அவர் விட்டுக்கொடுக்க தயார் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த மும்முனை போட்டியிலிருந்து கடைசி நேரத்தில் யாராவது ஒருவர் வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. கேப்டன் மில்லர் படத்திற்கு தான் அந்த வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.